வெளியே ஆர்ப்பாட்டம்; உள்ளே கொண்டாட்டம்!

ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சென்னை அணியைச் சேர்ந்த வீரரின் மகனுக்கு அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காகக் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக இன்று காலை முதல் மைதானத்தைச் சுற்றி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பல விதங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் போட்டிக்கு வலுத்து வரும் எதிர்ப்பால் சேப்பாக்கம் மைதானத்துக்கும், வீரர்கள் தங்கியிருக்கும் தனியார் ஓட்டலுக்கும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்துக்குள் போட்டிகளைக் காணச் செல்லும் ரசிகர்களுக்கும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி மைதானத்தைச் சுற்றி சுமார் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வெளியில் இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடைபெற்று வரும் இந்த வேளையில் சென்னை வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த, தென்னாப்ரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மகன் ஜிப்ரானின் 4-வது பிறந்தநாள் விழா கேக்வெட்டி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் கொண்டாடப்பட்ட புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளது.