தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்படும் அரசாங்க அதிபர்கள் அரசியல் காரணங்களுக்காக மாற்றப்படுவதும் அதனை மாவட்ட அரசியல் தலைவர்கள் வேடிக்கை பார்ப்பதும் மாவட்ட அரச நிர்வாகம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாறி மாறி வரும் அரசாங்கங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் விடயத்தில் பொதுமக்கள் நலன் சார்ந்து சிந்திக்காது பக்கச்சார்பாக அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு ஒரு அதிகார வர்க்கத்தை திருப்திப் படுத்துவதற்காக அரசாங்க அதிபர் பதவிகளை பாவிப்பதற்கு முற்படுகின்றனர்.
இது கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி என தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சியிலும் தொடர்கிறது என்பதே உண்மை.
தற்போது உள்ள அரசாங்க அதிபரை யார் கொண்டுவந்தார்கள் எந்த அரசியல் பின்னணியில் கொண்டு வரப்பட்டார் என்பதற்கு அப்பால் அவர் இடமாற்றம் செய்யப்பட உடனடி காரணிகள் என்ன என்பதை ஆராய வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஊழல் அதிகாரிகள் 15 வருடங்களுக்கு மேல் அரசியல் வாதிகளின் ஆதரவோடு தொடர்ந்து இதே மாவட்டத்தில் பணியாற்றும் போது திடீரென அரசாங்க அதிபரை மட்டும் இடமாற்றம் செய்ய வேண்டிய அவசரம் யாருக்கு ஏற்பட்டது. இதன் பின்னால் உள்ள அரசியல் காரணிகள் என்ன? என்பதை பொது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி இவ்வாறான இடமாற்றங்களை அனுமதிக்க முடியாது அனுமதிக்கவும் கூடாது. இந்த போக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நல்லதல்ல இதனை மாவட்டத்தில் உள்ள அனைத்து அத்து அரசியல் வாதிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
மக்களுக்காக பணியாற்றுவதற்கே ஒரு அரசாங்க அதிபர் தேவை அரசியல் வாதிகளுக்கும் மண் மாபியாக்களுக்கும், காணி மாபியாக்களுக்கும் பணியாற்றுவதற்காகவே இந்த மாவட்டத்தில் பல அரசாங்க அதிபர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதனை செய்யாத அரசாங்க அதிபர்கள் பழிவாங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடப்பதும் அது தான். கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சியிலும் இவ்வாறான பழிவாங்கள்கள் தொடர்வது அவரது நிர்வாகத்திற்கும்,ஆளுமைக்கும் இழுக்கை ஏற்படுத்தி உள்ளது.
எந்த அரச உயர் அதிகாரிகளின் நியமனமும், இடமாற்றமும் அரசாங்க நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ப நடைபெறவேண்டுமே தவிர அரசியல் தலையீடுகள் காரணமாக ஒரு அரச உயர் அதிகாரி மாற்றம் செய்யப்படுவதை யாரும் இனி வரும் காலங்களில் அனுமதிக்க வேண்டாம்.
மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்ய கொடுக்க முடியாது என தற்போதைய அரசாங்க அதிபர் கூறியமை அதனால் ஆத்திரமடைந்த கிழக்கு மாகாண ஆளுநர், வயல் காணிகள் உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு மண் அனுமதி பத்திரம் வழங்க முடியாது என கூறி தற்காலிகமாக மண் அனுமதி பத்திரம் வழங்குவதை நிறுத்தியமை, மாவட்டத்தில் அரச காணிகளை அபகரிக்கும் மாபியாக்களுக்கு உதவி செய்யயாமை போன்ற பல்வேறு புறக்காரணிகளுடன் சேர்த்து மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி ஒன்றுடன் ஏற்பட் கதிரைச் சண்டையும் தற்போதைய அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு காரணமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தவறியதால், கிழக்கு மாகாணசபையில் செயலாளராக இருந்த (இடமாற்றம் பெற்று செல்லும் அரச அதிபரின் உறவுமுறையானவர்) கருணாகரன் என்பவர் தற்பொழுது மட்டக்களப்பு அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.