இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளில் ‘மொட்டு’ ஆட்சி மலர்ந்தது

சிறிலங்கா பொதுஜன முன்னணி இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

தேர்தலின் போது, 167 உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை.

இந்தநிலையில், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சபைகளில், 56 சபைகளின் தவிசாளர் பதவிகளைக் கைப்பற்றி, சிறிலங்கா பொதுஜன முன்னணி அவற்றைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம், இதுவரை 211 உள்ளூராட்சி சபைகள் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வசம் வந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களை வென்ற, காலி, நீர்கொழும்பு, பதுளை, தெகிவளை – கல்கிசை மாநகர சபைகள் உள்ளிட்ட பல உள்ளூராட்சி சபைகளிலும், சிறிலங்கா பொதுஜன முன்னணியே ஆட்சியமைத்திருக்கிறது.

ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை பிளவுபடுத்தியும், தமது பக்கம் இழுத்தும், சிறிலங்கா பொதுஜன முன்னணி, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், கட்சி மாறி வாக்களிப்பதற்கு 10 மில்லியன் ரூபா தொடக்கம், 100 மில்லியன் ரூபா வரை பேரம் பேசப்படுவதாவும், தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.