கோவிட் – 19 நோய்ப் பரவல்; 61, 907 வணிக நிறுவனங்களுக்கு 4 சதவீத வட்டியில் 177,954 மில்லியன் ரூபாய் கடன் வழங்க ஒப்புதல்

நாட்டில் ஏற்பட்ட கோவிட் – 19 நோய்ப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு நிவாரணமாக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா கடன் திட்டத்தில் நேற்று (ஒக்.15) வியாழக்கிழமை வரையில் 61 ஆயிரத்து 907 கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கியால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 4 சதவீத வட்டியில் வணிக நிறுவனங்களுக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 192 மில்லியன் ரூபாய் கடன் வணிக வங்கிகளால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை மத்திய வங்கியானது 2020 ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற 61 ஆயிரத்து 907 கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதலளித்தது.

இந்த விண்ணப்பங்கள் மொத்தமாக ரூ.177,954 மில்லியனை வகைகூறுவதுடன் சௌபாக்யா கோவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் மூன்று கட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரையில், உரிமம்பெற்ற வங்கிகள் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 582 வியாபாரங்களுக்கிடையில் ரூ.133,192 மில்லியன் கடன்களை விடுவித்துள்ளது.

கடன் திட்டத்தின் முதற்கட்டம் 2020 ஏப்ரல் 01 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடன் திட்டத்தின் கட்டம் II மற்றும் கட்டம் III ஆகிய இரண்டும் 2020 ஜூலை 01இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டங்களின் நோக்கமானது ஆண்டிற்கு 4 சதவீத வட்டிவீதத்தில் மொத்தமாக ரூ.150 பில்லியனை தொழிற்படு மூலதனக் கடன்களாக வழங்குவதாகும். இந்த கடன்கள் 6 மாத சலுகைக்காலம் உள்ளடங்கலாக 24 மாதங்கள் மீளச்செலுத்தும் காலத்தினை வழங்குகின்றது.

கோவிட்-19 வெளித்தாக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் தனிநபர்கள் உள்ளடங்கலான வியாபாரங்கள் இதன் பயன்பெறுநர்களாகக் காணப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட ரூ.150 பில்லியன் வரையறையினைக் கருத்திற்கொள்ளாது விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானித்தது.
அறிவிக்கப்பட்ட முடிவுத் திகதி வரையில் கிடைக்கப்பெற்ற பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் அனைத்து விண்ணப்பங்களும் இந்தக்கடன் திட்டத்தினூடாக சேவையாற்றப்படுகின்றது -என்றுள்ளது.