மார்பில் துளைத்த துப்பாக்கி குண்டு… இலங்கை சிறுமியை கட்டாயப்படுத்தும் பிரித்தானிய பாடசாலை: பெற்றோருக்கும் மிரட்டல்

மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் இலங்கை சிறுமியை, அவரது பாடசாலை நிற்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தெற்கு லண்டனில் பெற்றோருடன் குடியிருக்கும் தற்போது 15 வயதான துஷா கமலேஸ்வரன் தொடர்பிலே, செவன் கிங்ஸ் பாடசாலை நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்வதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, துஷா கமலேஸ்வரன் பாடசாலைக்கு திரும்புவது மேலும் தாமதமானால், அபராதம் செலுத்த நேரிடும் என அவரது பெற்றோரையும் குறித்த பாடசாலை நிர்வாகம் மிரட்டியுள்ளது.

5 வயதாக இருக்கும் போது துஷா கமலேஸ்வரனுக்கு மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

அதில், அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதுடன், எழுந்து நடக்க முடியாத வகையில் செயலற்ற நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

தற்போது கொரோனா பரவல் காலம் என்பதால், மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க துஷா தமது வீட்டில் இருந்தே கல்வி பயின்று வருகிறார்.

இந்த நிலையில் எசெக்ஸ், இல்ஃபோர்ட் பகுதியில் செயல்பட்டுவரும் செவன் கிங்ஸ் பாடசாலை நிர்வாகம், துஷாவை பாடசாலைக்கு அனுப்பி வைக்க கட்டாயப்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி பெற்றோரான சசி(45), மற்றும் ஷாமிலா(43) ஆகியோரையும் அபராதம் விதிப்பதாக கூறி மிரட்டியுள்ளது.

துஷா தொடர்பில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பி.ஜே.சுரேஷ் அளித்த கடிதத்தை ஏற்க மறுத்த பாடசாலை நிர்வாகம், அந்த கடிதத்தில் போதிய தகவல் இல்லை என நிராகரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மருத்துவர் சுரேஷ், பாடசாலை நிர்வாகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியும், பலனளிக்கவில்லை என துஷாவின் சகோதரர் துசன்(21) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், துஷா திங்களன்று பாடசாலைக்கு திரும்பியுள்ளார், ஆனால் பாதுகாப்பற்றதாகவே உணர்வதாக தெரிவித்துள்ளார்.

துஷாவுக்கு 5 வயதாக இருக்கும் போது, தெற்கு லண்டனில் உள்ள உறவினரின் கடையில், நுழைந்த மூவர் கும்பல் போதைமருந்து கடத்தல் தொடர்பாக அங்கிருந்த ஒருவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளது.

இந்த களேபரத்தில் சிக்கிய துஷாவின் மார்பில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. அதில் இருந்தே துஷா நுரையீரல் மற்றும் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வலம் வருகிறார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி நதானியேல் கிராண்ட் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

எஞ்சிய இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.