காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்; காதலருடன் கைது

காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் தனது காதலனுடன் தனது தாய் வீட்டில் மறைந்திருந்த போது பிபிலைப் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் தனது இரண்டு வயது குழந்தைக்கு மருந்து எடுக்கச் செல்வதாகக் கூறி பிபிலை பொது வைத்தியசாலைக்கு கடந்த மூன்றாம் திகதி முற்பகல் சென்றிருந்தார்.

அதையடுத்து அவர் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போய்விட்டதாக கணவனால் பிபிலைச் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த பெண் பொலிசாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் 17 தினங்களுக்கு பிறகு இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பெண்ணின் தாய் வீட்டை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோதே குறித்த இருவரும் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , அப்பெண்ணின் இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி சட்டப்பூர்வ கணவனுடன் மீண்டும் இணைந்து வாழவும் பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் அறிவுறுத்தினார்.

எனினும் அவர்கள் அதனை நிராகரித்தமையினால் பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை அப் பெண்ணின் கள்ளக் காதலனுக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.