மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் வீட்டில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமனார்! பின்னர் மேல்தளத்தில் கண்ட காட்சி

தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பழனி (46). பிளம்பர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பவானி (40). இவர்களுக்கு தேவதர்ஷினி (17) என்ற மகளும், பிரகதீஷ் (11) என்ற மகனும் இருந்தனர்.

சொந்த வீட்டில் முதல் மாடியில் பழனி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வீட்டின் கீழ்தளத்தில் அவரது தந்தை சண்முகம் (75) வசித்து வருகிறார்.

நேற்று முன் மதியம் வரை பழனி யாரும் கீழே இறங்கி வராததால் சந்தேகம் அடைந்த சண்முகம், முதல் மாடியில் உள்ள தனது மகன் பழனி வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் வாசலில் வளர்ப்பு நாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம், கதவை திறந்து வீட்டுக்குள் சென்றார்.

படுக்கையில் மருமகள் பவானி மற்றும் பேரன், பேத்தி என 3 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். பழனியை காணவில்லை.

சந்தேகத்தின்பேரில் 2-வது மாடியிலிருந்த பழனியின் அலுவலகத்துக்கு சென்று பார்த்தார். அங்கு பழனி, கத்தியால் கையை அறுத்து ரத்தம் வடிந்த நிலையில் கவலைக்கிடமாக கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் மூவரின் சடலங்களையும் கைப்பற்றினார்கள்.

விசாரணையில் பழனிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் ரூ.12 லட்சம் வரை கடன் இருந்ததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

எனவே பழனி தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக அனைவரும் விஷம் குடித்து உள்ளனர். வீட்டில் வளர்த்த நாய்க்கும் விஷம் கொடுத்து உள்ளனர். ஆனால் இதில் பழனியின் மனைவி, மகள், மகன் மற்றும் வளர்ப்பு நாய் இறந்து விட பழனி மட்டும் உயிர் பிழைத்து உள்ளார்.

பின்னர் அவர் மாடிக்கு சென்று கையை அறுத்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என பொலிசார் கருதினார்கள்.

இதனிடையில் மயக்கத்தில் இருந்து விழித்த பழனி அளித்த வாக்குமூலத்தில், ஹார்டுவேர் தொழில் செய்து வந்தேன். கொரோனா பரவலால் தொழிலில்நஷ்டம் ஏற்பட்டதால் மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, நானும் தற்கொலைக்கு முயன்றேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.