இடைநிறுத்தப்பட்டது கொழும்பிலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகள்!

கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துச் சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேருந்து சேவைகள் தொடர்பாக நாளை மீண்டும் ஆலோசணைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே,
ஊரடங்கு காரணமாக இன்று இரவு தொடக்கம் அனைத்து இரவு நேர தபால் தொடருந்து சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதால் இந்த அறிவிப்பை ரயில்வே தெரிவித்துள்ளது.

இருப்பினும், தபால் தொடருந்து சேவை தவிர்த்து, வழக்கமான தொடருந்து சேவைகள் திட்டமிடப்பட்ட அடிப்படையில் இயக்கப்படுகின்றன என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.