இறந்தவர் உயிருடன் இருக்கிறார் எனக் கூறி அச்சுவேலி மருத்துவமனை மீது தாக்குதல்!

இறந்தவர் உயிருடன் இருக்கிறார் எனக் கூறிய கும்பலால் அச்சுவேலி மருத்துவமனை தாக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இன்று பதற்றம் நிலவியது.

அச்சுவேலியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் காயமடைந்தார்.

இருவரும் அம்புலன்ஸ் மூலம் முதலில் அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சாரதி உயிரிழந்து விட்டார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்தவர்கள் உயிரிழந்தவர் உயிருடன் இருக்கிறார் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அச்சுவேலி மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவின் கண்ணாடிகளை அந்தக் கும்பல் அடித்து நொருக்கியது.

தொடர்ந்து அவர்கள் பிரேத அறையையும் உடைத்து உள்ளே நுழைய முற்பட்டனர். இந்த விடயம் குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் முரண்பட்ட கும்பலை அமைதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.