யாழில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள்; கடும் எச்சரிக்கை!

பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறினால் யாழ்.நகரப்பகுதியை முற்றாக முடக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் என்பதுடன் பலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் துர்ப்பாக்கியம் ஏற்படும் எனவும் நகர முதல்வர் இமாணுவேல் ஆர்னல்ட் எச்சரித்துள்ளார்.

யாழ்.மாநகர முதல்வர் தலமையில், பொலிஸார், சுகாதார அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள் கொண்ட பாரிய குழு, அத்தியாவசிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இன்று காலை நேரில் ஆராய்ந்தனர்.

இதன்போது முதல்வர் மேலும் கூறுகையில்,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த அதி சொகுசு பஸ்ஸில் பயணம் செய்தவர்களினால் யாழ்.நகர கடைகள் சில தனிமை படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட பிசி ஆர்பரிசோதனையின் முடிவுகள் பாதகமாக அமைய விட்டாலும் அவர்கள் தொடர்ந்தும் சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றுவதோடு வியாபார நிலையங்களும் வழங்கப்பட அறிவுறுத்தல்களை உரிய வகையில் பின்பற்ற வேண்டும்.

அத்துடன் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ் நகரை வந்தடையும் பேருந்துகள் தற்போது மட்டுப் படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் நிலைமை தொடர்பில் உரிய தரப்புக்கும் ஆராய்ந்து உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மட்டும் செயற்படுத்துவதற்காகன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

யாழ்.நகர பாதுகாப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ள நிலையில் நகர பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக உள்ளதாகத் தொரிவித்ததாக அவர் கூறினார்.

மேலும் இதன்போது யாழ்.நகரில் நடைபாதையில் வியாபாரம் செய்தவர்கள், மற்றும் நடைபாதையில் பொருட்களை காட்சி படுத்தியவர்கள், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதவர்கள், ஆசனங்களுக்கு மேலாக மக்களை ஏற்றியவர்களுக்கு இறுதி எச்சரிக்கையும் அதிகாரிகளால் வழங்கப்பட்டிருந்தது.