பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் அதிரடியாக கைது!

மும்பையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் தொலைகாட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு இருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டது.

அதன்பின்னர் 2019ம் ஆண்டு அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தூசுதட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று காலை அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைக்காக ரெய்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதேவேளை அர்னாப் கோஸ்வாமி அதிரடியாக கைது செய்யப்பட்டதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.