“வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பதிவு செய்யப்பட்ட குறித்த பேருந்தின் இலக்கத்தை உட்புறத்தில் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும். பயணிகள், தாம் பிரயாணம் செய்யும் பேருந்தின் இலக்கத்தை இலகுவாக குறித்து வைத்திருக்கவேண்டும்”
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கேட்டுள்ளார்.
வடமாகாணத்தில் கோவிட் தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (04-11-2020) முற்பகல் 1௦ மணிக்கு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணம் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகணத்திற்கு உள்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி, பொலிஸ் மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர்,
“நாம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, எமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைளை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முறைகளை தீர்மானிக்கவேண்டும்.
அத்துடன் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர்கள் சுகாதார துறையினர், மற்றும் பொலிஸாரையும் ஒன்றிணைத்து, கோவிட் -19 சுகாதார வழிகாட்டல்களை முறைப்படி கடைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் முறை தொடர்பாக பொதுவான ஒரு திட்டத்தை தயாரிக்கும்படியும், அத்துடன் மாணவர்களிடையேயும் கோவிட் -19 சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பதிவு செய்யப்பட்ட குறித்த பேருந்தின் இலக்கத்தை உட்புறத்தில் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும். பயணிகள், தாம் பிரயாணம் செய்யும் பேருந்தின் இலக்கத்தை இலகுவாக குறித்து வைத்திருக்கவேண்டும்.
கடந்த காலங்களை விட தற்போது வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்கள் பெருமளவு குறைவடைந்துள்ளதுடன் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளும் சட்டரீதியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை சிறந்தமுறையில் நடைமுறைப்படுத்திய பொலிஸாருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மாவட்ட ரீதியாக டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய , அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் சட்டரீதியற்ற முறையில் நடைபெறும் மண் அகழ்வு, மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கும் உரிய சட்ட நடவடிகைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த ஆளுநர் வலியுறுத்தினார்.