ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தரவையடுத்து வடக்கில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்

நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு பூரணமாக நிதி வழங்கப்படாமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, குறித்த வீடுகளுக்கான மீதித் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வீடமைப்பு திட்டங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எஞ்சிய தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தினை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3,000 வீடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4,000 வீடுகளும் மின்சார இணைப்பு இன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.