யாழில் இரவு நேரத்தில் இடம்பெற்ற மோதல்- இருவர் பரிதாப உயிரிழப்பு!

யாழில் குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சுழிபுரம் மத்தி, குடாக்கனைப் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) பின்னிரவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் உறவினர்களுக்கு இடையே மோதல் உருவாகும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று மாலையிலிருந்து முறுகல் நிலை காணப்பட்டுள்ளது. அதுதொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.

இதனால், ஒரு பகுதியினர் வாள்களுடன் மற்றைய பகுதியினரின் வீட்டுக்குள் பின்னிரவில் புகுந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்திய நிலையிலேயே இருவரின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.