ஒர் இனத்திற்கு எதிராக கருத்துக்களை முகநூலில் பதிவேற்றிய பாடசாலை மாணவனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!!

பேஸ்புக் சமூக வலைத்தளம் வழியாக இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் காணப்படும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொழும்பு பிரதான பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவனுக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு நீதவான் சந்தேகநபரை அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளார்.கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், மாணவனுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

எனினும், சந்தேகநபருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், பிணை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதவான் கூறியுள்ளார்.இதற்கு அமைய கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபரை அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான மாணவன் முஸ்லிம் இனத்தவர் என்பதுடன், அவர் சிங்கள பெயரில் பேஷ்புக் சமூக வலைத்தளத்தில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை பதிவேற்றியதன் மூலம் குற்றம் செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.