யாழ்ப்பாணம் வடமராட்சிமாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதான சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த மாணவன் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சம்பவங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை எனவும், மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று மாலை சடலத்தைப் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மயூரன், கழுத்து இறுகியதால் மரணம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.
எனினும், மாணவனின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸாரும் அவரின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இளங்குன்றனின் உடல் இன்றிரவு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அவரது உடல் பருத்தித்துறை, துன்னாலை வடக்கிலுள்ள உள்ள அவருடைய இல்லத்துக்கு மருத்துவபீட மாணவர்களால் கொண்டு செல்லப்படும் என்று சக மாணவர்கள் தெரிவித்தனர்.