கொரோனா தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் முன்னணி ஆராய்ச்சியாளராக இலங்கை வம்சாவளி பெண்!

உலக அளவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்க முயலும் தடுப்பூசி முயற்சியில் முன்னணி ஆராய்ச்சியாளராக இலங்கையில் பிறந்த பேராசிரியர் மகேஷி என்.ராமசாமி உள்ளார்.

இலங்கையில் பிறந்த மகேஷி, ஐக்கிய இராச்சியத்தில் மருத்துவம் பயின்றார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் முன்னோடியாக இருந்து வருகிறார்.

தடுப்பூசி தொடர்பான தகவல்கள் மருத்துவ இதழான தி லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது.அதில் பேராசிரியர் மகேஷி ராமசாமியின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்ட் கல்லூரியில் மருத்துவத்தில் இளங்கலை பட்டமும், ஒக்ஸ்போர்ட் மற்றும் லண்டன் மருத்துவ நிறுவனங்களில் தொற்று நோய்கள் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

அவர் தற்போது மேகன் மருத்துவக் கல்லூரியில் முதன்மை விரிவுரையாளராகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்த NHS அறக்கட்டளையிலும் பணியாற்றுகிறார்.

அவர் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் முன்னணி ஆராய்ச்சியாளராக உள்ளார். மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விருது பெற்ற மூத்த மருத்துவ விரிவுரையாளராக உள்ளார்.

பேராசிரியர் மகேஷி என்.ராமசாமியின் பெற்றோரும் புகழ்பெற்ற விஞ்ஞானிகளே. அவரது தாயார் பேராசிரியர் சமரநாயக்க ராமசாமி. கொழும்பின் விசாகா கல்லூரியின் பழைய மாணவர்.

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் முதல் வகுப்பு கௌரவ பட்டம் பெற்றார்.

பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காமன்வெல்த் புலமைப்பரிசிலில் தெரிவாகி, ஐக்கிய இராச்சியத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் ஆனார்.

இலங்கையிலிருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு முதுகலை படிப்புக்காக வந்த தமிழ் விஞ்ஞானி ரஞ்சன் ராமசாமியை மணந்தார். அவர்கள் கொழும்பில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியினர் பூச்சியியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாக மாறினர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு, அவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள தமன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாக பணியாற்றினார்கள். பின்னர் கொழும்பு வந்தனர்.

அப்போது, மகேஷி ராமசாமியைப் பெற்றெடுத்தனர். பின்னர் அவர்கள் கென்யாவின் நைரோபியில் பணிபுரிந்தனர், 1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர்களாகவும் இருந்தனர்.