யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பத் தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளாகி வீழ்ந்த அவரை ராணுவ பேருந்து மோதியதால் உயிரிழந்தார் என்று சம்பவ இடத்தில் நின்றிருந்த வர்களால் கூறப்பட்டது.
எனினும் பொலிஸார் விசாரணையின் பின்னரே அது பற்றிக் கூறமுடியும் என்று கூறுகின்றனர்.
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையிலிருந்து சிறிது தூரத்தில் புளியடியில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் விபத்து இடம்பெற்றது. அல்லாரை வடக்கைச் சேர்ந்த சந்திரயோகலிங்கம் மயூரன் (வயது – 28) என்பவர் உயிரிழந்தார். அவர் 4 மாதங்களான குழந்தையின் தந்தை.
“வீதியில் காரின் பின்னால் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். போக்குவரத்துப் பொலிஸார் காரை நிறுத்தியுள்ளனர். அதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மயூரன் காருடன் மோதுண்டு வீதியில் வீழ்ந்தார் என்றும் அதன்போது அவருக்குப் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த ராணுவ பேருந்து மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் கூறப்பட்டது.
அவரது சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ராணுவ வாகன சாரதி கைது செய்யப்படவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறினர். ஆனால் அது தொடர்பில் பொலிஸாரின் பதிலைப் பெறமுடியவில்லை.