17 வயது மாணவனை துப்பாக்கியால் சுட்ட வைத்தியர்! கொழும்பில் பரபரப்பு!

கொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் பாடசாலை மாணவனை துப்பாக்கியினால் சுட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்வர் 46 வயதுடைய வைத்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.

பாடசாலை மைதானத்தில் குறித்த சிறுவன் நேற்றைய தினம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பந்து வைத்தியரின் வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்துள்ளது.

பந்தினை சிறுவன் எடுக்க முயன்றபோதே இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து வைத்தியர் தனது பாதுகாப்புத் துப்பாக்கியினால் குறித்த மாணவனை சுட்டுள்ளார்.

துப்பாக்கிப் சூட்டில் காயமடைந்த 17 வயதுடைய மாணவன் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார் அவரிடமிருந்து துப்பாக்கியை மீட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவரை நுகேகொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.