மொனராகலை மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 1534 பேர் சிறுநீரக நோயினால் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாக, மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் பாலித திலீப்குமார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,மொனராகலை மாவட்டத்தில் சிறுநீரக நோயாளர்கள் வெள்ளவாய மற்றும் புத்தலை போன்ற பகுதிகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றனர்.
மொனராகலையில் 102 பேர், வெள்ளவாயவில் 271 பேர், புத்தலையில் 229 பேர், படல்கும்புரவில் 90 பேர், செவனகலையில் 150 பேர், கதிர்காமத்தில் 18 பேர், மெதகமையில் 64 பேர், சியாம்பலாண்டுவையில் 186 பேர், மடுல்லையில் 43 பேர், தனமல்விலையில் 274 பேர், பிபிலையில் 105 பேர் என்ற எண்ணிக்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுத்தமான குடிநீர் பாவனையின்மையே இச்சிறுநீரக நோய் ஏற்படக் காரணமாகும். ஆகவே, இதுவிடயத்தில் அதிகூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.