சர்ச்சையை ஏற்படுத்திய புட்டு விவகாரத்தில் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் திடீர் மன மாற்றம்

புட்டு விவகாரத்தில் தமிழ் மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருந்தால் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னண்டோ இன்று பகிரங்க மன்னிப்பு கோரினார்.

யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் மாவீரர்தினத்திற்கு தடைகோரி பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போது, யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மன்னிப்பு கோரினார்.

இன்றைய வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையன அரச சட்டவாதி, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்து, எந்த இன மக்களின் உணவு பழக்க வழக்கம் அல்லது நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக இருந்தால் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார் என அறிவித்தார்.

இதன்போது எழுந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ, பகிரங்க மன்னிப்பு கோரினார்.