சென்னைத் தமிழில் மெர்சலாக்கிய ஹர்பஜன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வான ஹர்பஜன் சிங் ஏலம் நடைபெற்ற நாளன்று தமிழில் ட்விட் செய்ததைப் போல் நேற்றும் ட்விட் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 11ஆவது சீசன் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் வீரர்கள் ஒருபுறம் தயாராகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் களமிறங்க உள்ளதால் அதன் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஏலம் நடைபெற்ற நாளன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டரில் தமிழில் பதிவு ஒன்றினை ஹர்பஜன் பதிவிட்டிருந்தார். நேற்று சென்னை வந்த அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வரவேற்று மாலை அணிவித்தனர். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் ஹர்பஜன் சிங் சென்னைத் தமிழில் பதிவு ஒன்றினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் நான் வந்துட்டேன்னு சொல்லு என்று பதிவைத் தொடங்கி சென்னை அணியில் மஞ்சள் ஜெர்ஸி அணிந்து, விசில் சத்தத்திற்கு இடையே விளையாடுவதை நினைத்தால் மெர்சலாகுது என்று பதிவிட்டுள்ள அவர், அதனுடன் தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க என்றும் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் முதன்முதலாக வேறொரு அணிக்காக விளையாட உள்ளார்.