காரைநகரில் ஒருவருக்கும் கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று

யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காரைநகரில் 40 வயதுடைய ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து கடந்த 21ஆம் திகதி காரைநகருக்கு வருகை தந்த அவரை 3 நாள்களுக்குப் பின்னரே கண்டறிந்து சுயதனிமைப்படுத்தப்பட்டார். சுகாதாரத் துறையினர் சுயதனிமைப்படுத்தலில் வைத்துக் கண்காணித்தனர். அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் குடிதண்ணீர் போத்தல் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனத்தின் வாகனச் சாரதிக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் மேல் மாகாணத்துக்கு சென்று திரும்பிய நிலையில் கரைச்சியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 71 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கு மட்டும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.