மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி பலியான சிறுவன்

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகன் கிஷோர்(10) அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒண்டியாம் தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டியில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது அங்குள்ள மின் மோட்டாரை இயக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். சிறுது நேரத்தில் சம்பவ இடத்திலே சிறுவன் உயிரிழந்தான்.

இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த மின் மோட்டாருக்கான மின் இணைப்பு பெட்டி பராமரிப்பு இன்றி இருந்ததும், அதனால் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவனின் உடலை மீட்ட போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.