இளைஞர்களே எச்சரிக்கை: போலந்து நாட்டில் வேலைவாய்ப்பென ஏமாற்றும் கும்பல்!

போலந்தில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபடுபவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல இளைஞர், யுவதிகளிடம் போலந்து வேலைவாய்ப்பு பெற்றுத்தருவாக கூறி பண மோசடியில் ஈடுபடும் குமபல் பறறிய தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

“சில உள்ளூர் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளன, நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

போலந்தில் வேலை வாய்ப்புகள்உள்ளதாக ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, வேலை தேடுபவர்களை இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கவர்ந்திழுக்கின்றன.

எனினும், போலந்தில் வேலை பெற, ஒருவருக்கு பணி அனுமதி இருக்க வேண்டும் என்று போலந்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

வேலை தேடும் இலங்கையர்களிடமிருந்து 750 முதல் 1000 அமெரிக்க டொலர் (ரூ .135,000 முதல் ரூ .180,000 வரை) வசூலிக்கும் இந்த கும்பல்கள், இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ள போலந்து தூதரக அதிகாரிகளுடன் விசா நேர்காணலை ஏற்பாடு செய்வதாக வாக்களித்து விட்டு பின்னர் ஏமாற்றி செல்வதாக தொழிலாளர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் போலந்து தூதரகம் இல்லை. புதுதில்லியில் உள்ள போலந்து தூதரகமே இலங்கயர்களின் விசா விவகாரங்களை கவனிக்கிறது. கொழும்பில் விசா மையம் அமைக்குமாறு போலந்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

“இது ஒரு மாஃபியா, ஒரு மோசடி. இதை நாங்கள் நிறுத்த வேண்டும். இதனால்தான் இங்கு விசா மையத்தை நிறுவுமாறு போலந்து அதிகாரிகளிடம் கோரியுள்ளோம். போலந்தில் நிறைய நல்ல வேலைகள் உள்ளன, இதுபோன்ற வாய்ப்புகளை நாம் ஆராய வேண்டும். ஆனால் அப்பாவி வேலை தேடுபவர்களை வேலைவாய்ப்பு முகமைகள் சுரண்டுவதை நாம் நிறுத்த வேண்டும் ”என்றார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலை தேடுபவர்களை எந்த நேரத்திலும் போலந்தில் பணி அனுமதி இல்லாமல் இலங்கை வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.