யாழ்.மைந்தன் வியாஸ்காந்திற்கு தமிழ் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

கடந்த காலத்தில் இன்று தமிழர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த்தைவிட பல மடங்கு கொண்டாடப்பட்டவர்தான் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரர்.

உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கூட ஒரு தமிழன் இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதால் இலங்கை அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்தார்கள் ஈழத்தமிழர்கள்.

ஆனால் காலப்போக்கில் நடந்தது என்ன, முரளிதரன் தன்னை ஒரு தமிழராகவே காட்டிக்கொள்ள விரும்பவில்லை மேலும் தமிழர்களை, தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி பேசி வந்ததால் முரளிதரனை முற்றாக வெறுத்தார்கள் தமிழர்கள்.

ஏன் இதை தற்போது சொல்கிறோமென்றால் தற்போது வியாஸ்காந்த் யாழ்ப்பாணத்திலிருந்து எல்பிஎல் அணிக்காக விளையாடும் முதலாவது வீரர் என்ற பெருமையைத் தனதாக்கியுள்ளார்.

கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி இலக்கை விரட்டி துடுப்பெடுத்தாடத் தொடங்கிய போது அடுத்தடுத்து நான்கு ஓவர்களையும் சிறப்பாக வீசி அசத்தியிருந்தார்.

இதில் தனது மூன்றாவது ஒவரை வீசிய போது இலங்கை அணியின் மிகச்சிறந்த சகலதுறைவீரரும் முன்னாள் அணித்தலைவருமான அஞ்சலோ மத்தியுஸ் தனக்கு எதிரே நிற்கின்றார் என்று அஞ்சாது சிறப்பாக பந்துவீசி மத்தியுஸ் ஒரு சிக்ஸரையும் பவுண்டரியையும் அடித்த போதும் கலங்காது எல்.பி.எல் அறிமுகத்தில் கைப்பற்றிய முதலாவது விக்கட்டாக அஞ்சலோ மத்தியுஸின் விக்கட்டை தனதாக்கி சிங்கள மக்களின் பாராட்டையும் பெற்றார்.

தற்போது வியாஸை உலக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர், வரும் காலங்களில் இலங்கையின் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அப்போது உங்கள் குடும்பத்தார் உங்கள் வளர்ச்சியில் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்களோ அதேபோல் இந்த தமிழினமும் உங்கள் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைகிறது.

எனவே முரளிதரன்போல் தமிழர்களின் இதயங்களை நொருக்கிடாதீர்கள், மீண்டும் எம்மால் காயப்பட முடியாது.