தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் தாய்- மகள்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சென்னையில் மனைவி, மகளை கொன்றுவிட்டு தலைமறைவான நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் கீத கிருஷ்ணன்- கல்பனா(36). இவர்களுக்கு குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக கீத கிருஷ்ணனின் வீடு பூட்டியிருந்ததுடன் துர்நாற்றம் வீசியுள்ளது.

எனவே அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் விரைந்து வந்து சோதனையிட்டனர்.

கீத கிருஷ்ணனின் வீட்டை உடைத்து உள்ளே சென்ற போது, தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் கல்பனா உடல் இருந்தது.

அதே போல, குனாளிஸ்ரீயும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலாமாகக் கிடந்துள்ளார். அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வீட்டில் இருந்து 2 கடிதங்களை கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில், கோதண்டபானி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தங்களை மோசடி செய்து விட்டதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என கீத கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

ஆனால் எங்கு தேடியும் கீத கிருஷ்ணனை காணவில்லை, எனவே மனைவி, மகளை கொலை செய்து விட்டு கீத கிருஷ்ணன் தப்பியோடி விட்டாரா? கீத கிருஷ்ணனுக்கு என்ன ஆனது? போலீசை குழப்புவதற்காக கடிதம் எழுதி வைத்தாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே கல்பனாவின் செல்போனை எடுத்துக் கொண்டு இரண்டாவது மகளையும் தூக்கிக் கொண்டு கீத கிருஷ்ணன் தலைமறைவானது தெரியவந்தது.

இந்நிலையில் ஐ.எம்.இ.ஐ நம்பரை தேடி வந்த போலீசார், இன்று காலை கோயம்பேடு அருகே கீத கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.