மனைவியை தனியாக ரயிலில் அனுப்பி வைத்த கணவர்… தலையில் இடியாய் விழுந்த பேரதிர்ச்சி

ரயிலில் அனுப்பிவைத்த மனைவி காணாமல் போனதால் மூன்றுநாட்கள் போராடி கணவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர ஜனா (28). இவருக்கு கபீர் ஜனா(27)என்ற மனைவி உள்ளார்.

குறித்த தம்பதிகள் புதுச்சேரியில் வேலை செய்துவந்த நிலையில், இவரது மகன் ஆகாஷ் ஒடிசாவில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

ஆண்டிற்கு ஒருமுறை மகனை பார்த்துவருவதைப் பழக்கமாக வைத்திருந்த இந்த தம்பதிகள், இந்த ஆண்டு தனது மனைவியை மட்டும் மகனை பார்ப்பதற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் தான் அனுப்பி வைத்த மனைவி ஒடிசா போய் சேரவில்லை என்று உறவினர்கள் மூலம் ரவீந்தருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் மனைவியை காணவில்லை என்று பொலிசில் புகார் அளித்துவிட்டு, 3 நாட்களாக புதுச்சேரியிலிருந்து ஒடிசா வரை ரயில் நிலையத்தில் தேடியுள்ளார்.

இறுதியாக ஒடிசா மாநிலத்திற்கு உட்பட்ட பாலேஸ்வர் என்ற பகுதியில் கபீரின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாலேஸ்வர் ரயில் நிலையத்தில் விசாரித்துள்ளார்.

மயங்கிய நிலையில் ஒரு பெண்ணை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது ரவீந்தரின் மனைவி இருந்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ரயிலில் பயணித்த முதியவர் ஒருவர் வாழைப்பழம் கொடுத்ததாகவும் அதை வேண்டாம் என்று கூறியபோது தந்தையைப் போன்று இருக்கும் தன்னிடம் வாங்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் இதனால் வாழைப்பழத்தை கபீர் சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழைப்பழத்தில் முதியவர் மயக்கமருந்து வைத்து கொடுத்ததும், பின்பு தன்னிடமிருந்து 3 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துவிட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் கில்லி படத்தில் விஜய் நடித்த காட்சியை நினைவு கூர்ந்துள்ளது.