தீர்த்த குளியலுக்காக சென்ற மாணவன், மாணவி நீரில் மூழ்கி பலி

சோளிங்கர் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்ற மாணவ,மாணவியர் இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோகநரசிம்மர் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் வந்தனர்.

அவர்கள், யோகஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கும் சின்னமலை அடிவாரத்தில் உள்ள பாண்டவ தீர்த்தகுளத்திற்கு சென்றனர். அவர்களோடு ஜெகன்(18) மற்றும் அபிநயா (14) இருவரும் தீர்த்தக் குளியலுக்காக சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அவர்களது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த ஜெகன் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டும், அபிநய தனியார் பள்ளியில் 10ம் வகுப்பும் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.