மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் மரணித்து கிடந்த டி.எஸ்.பி: காரணம் என்ன?

பெங்களூரில் பெண் டி.எஸ்.பி லட்சுமி தனது சொந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

கோலார் மாவட்டம் மாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கேஷ். அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் மகள் லட்சுமி ( வயது32). இன்ஜீனியரிங் பட்டதாரியான இவர் 2014- ஆம் ஆண்டு கர்நாடக போலீஸ் சர்வீஸில் தேர்ச்சி பெற்றார்.

கர்நாடக மாநில சி.பி.சி.ஐ.டி பிரிவில் டி.எஸ்.பியாக பணியாற்றி வந்தார். தன்னுடன் கல்லூரியில் படித்த நவீன் என்பவரை காதலித்து லட்சுமி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி பெங்களூரு அன்னபூர்னேஸ்வரிநகரில் வசித்து வந்தனர்.

நவீன் ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கப்பணியில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நவீன் தனது பணி காரணமாக ஐதராபாத் சென்றுவிட்டார்.

லட்சுமி வசித்து வந்த பகுதியை சேர்ந்த மனோ என்பவர் வீட்டில் மதுவிருந்து நடத்தப்பட்டுள்ளது. இதில், லட்சுமியும் கலந்து கொண்டுள்ளார். மது விருந்தில் லட்சுமியுடன் அவரின் நண்பர்கள் பிரஜ்வல், மனோ உள்ளிட்ட 4 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அனைவரும் மது அருந்திய பின்னர் மாடிக்கு சென்றுள்ளார் லட்சுமி. நீண்ட நேரமாகியும் லட்சுமி கதவை திறக்காததால் சந்தேமடைந்த நடம்பர்கள் கதவை உடைத்து பார்த்தபோது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் லட்சுமி இருந்துள்ளார்.

தொடர்ந்து , அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் சென்று பார்வையிட்ட போது, லட்சுமியின் கால் தரையை தொட்டபடி இருந்ததை கண்டனர். இதனால் , சந்தேகமடைந்த போலீசார் லட்சுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மது விருந்துக்கு ஏற்பாடு செய்த மனோ மாநகராட்சியில் பல்வேறு துறைகளில் டென்டர் எடுத்து வந்துள்ளார். அரசியல் செல்வாக்கு காரணமாக, கொரோனா காலட்டத்தில் கோவிட் மையங்களையும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். அன்னபூர்னேஸ்வரி நகரில் மதுபான விருந்து நடத்துவதற்கென்றே தனியாக வீடு கட்டியதாக தெரிகிறது.

மேலும் மனோவின் வீட்டிற்கு வந்த பிறகு தான் லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனோ உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி நவீன் மற்றும் லட்சுமி இருவரிடையே அடிக்கடி தகராறு மற்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.