கிளிநொச்சியில் மேலும் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறிப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் என இரண்டு பேருக்கே இவ்வாறு கண்டறிப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிக்குச் சென்ற குடும்பத்தலைவர் ஒருவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் தொற்றுக்கான அறிகுறிகள் அறியப்பட்டன.
பாரவூர்திச் சாரதியான அவர் அன்றைய தினமே வத்தளைக்குச் சென்றிருந்ததால் அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட முதலாவது பரிசோதனையில் மீளவும் மாதிரிகள் பெறுமாறு ஆய்வுகூடத்தினால் அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் மீளவும் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சாரதியின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக இன்று பெறப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை அறிக்கை நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.