திருக்கோவில் பிரதேசத்தில் வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலிஸாரை தேடிச் சென்று ஒரு மாணவன் ஒப்படைத்த சம்பவம் 15.03.2018 அன்று திருக்கோவிலில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது வீதியில் காணப்பட்ட ஒரு இலட்சம் ரூபா கொண்ட பணப் பொதியை கண்டெடுத்து வீதிக் கடமையிலிருந்த பொலிஸாரை தேடிச் சென்று அந்த மாணவன் ஒப்படைத்துள்ளான்.
திருக்கோவில் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் தரம் 8 பிரிவில் கல்வி கற்கும் க.ஹயானன் என்ற மாணவனே தான் கண்டெடுத்த பணம், வங்கிப் புத்தகம் மற்றும் அடையாள அட்டைகளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளான்.
இதனையடுத்து குறித்த பணமும், ஆவணமும் உரிமையாளர்களிடம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டன. குறித்த மாணவனை பொலிஸார் பாராட்டியதோடு இம்மாணவனை முன்மாதிரி யாகக் கொண்டு ஏனைய மாணவர்கள் செயற்படவேண்டும் எனவும் கூறினர்.