தாய் சுடுகாட்டை நோக்கி – மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை செல்ல முயற்சி! (Video)


தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்ட அரசியல் கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது  மகள்  ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆநன்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு  காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மீண்டும் காவல்துறையினரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் இடம்பெற்றது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் சென்றுவிட மகள் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் நெகிழவைத்தது.

தந்தை 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில்  கைது செய்யப்பட்ட பின்னர், தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும்  தந்தையை பிரிந்த நிலையில், தற்போது தாயையும் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.