உள்ளூராட்சி சபைகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலர் வீ.ஆனந்தசங்கரி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுடன், நாளை மறுநாள் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் செயற்படத் தொடங்கவுள்ளன.
வடக்கு, கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சபைகளே அமைந்துள்ளன.
தமிழ் அரசுக் கட்சி பெரும்பாலான சபைகளில், அதிக ஆசனங்களை வென்றுள்ள போதிலும், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை காணப்படுகிறது.
இந்த நிலையிலேயே, தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைக்க, தமது கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் அவ்வாறு ஆதரவளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்தசங்கரி எச்சரித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில், ஈபிஆர்எல்எவ், ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி, ஈரோஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.