வெளியானது உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ்

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அரச அச்சக திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 10ஆம் நாள் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், தேர்தல் நடந்து ஒன்றரை மாதங்கள் கழித்தே அரசிதழில் பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் நாள் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்த அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், தற்போது 8 மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் விபரங்களே அரச அச்சக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இன்னும் சில நாட்களில் ஏனைய மாவட்டங்களின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர் விபரங்கள் வெளியிடப்பட்டு விடும் என்றும், அரச அச்சக திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.