சமையல் உப்பு பக்கட்டில் கிடந்த இறந்த தவளை

உணவு சமைக்க வர்த்தக நிலையத்தில் கொள்வனவு செய்த உப்பு பக்கட்டில் இறந்து காய்ந்த நிலையில் காணப்பட்ட தவளை இருந்ததாக பொலன்னறுவை, பொதிந்திவெ பிரதேசத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான கே.ஜீ. ரவிந்திர குமார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தகவல் வெளியிடுகையில்,

அண்மையில் கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களுடன் உப்பு பக்கட் ஒன்றை கொள்வனவு செய்து வந்தேன்.

இன்று காலை உப்பு பக்கட்டை திறந்து அதனை சாடியில் போட்ட போது ஒரு பெரிய உப்பு கட்டி காணப்பட்டது.

அதனை உடைத்த போது அதில் இறந்து காய்ந்து போன நிலையில் காணப்பட்ட தவளை இருந்தது. என்னால், நம்ப முடியவில்லை.

தவளைகளில் விஷத்தன்மை உள்ள தவளைகள் இருக்கின்றன. நான் கொள்வனவு செய்த உப்பை தயாரிக்கும் நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உள்ளது. அந்த நிறுவனம் தான் நாடு முழுவதும் உப்பை விநியோகித்து வருகிறது.

நான் கூறுவது உண்மையில்லை என்றால் தவளையை பரிசோதனை செய்து பார்க்க முடியும். பொது சுகாதார அதிகாரி பரிசோதித்த பின்னர் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தது என்று உறுதிப்படுத்தப்பட்ட பக்கட்டிலேயே தவளை இருந்தது.

உப்பு பக்கட்டில் இலங்கை தரச்சான்றிதழ் முத்திரையும் உள்ளது ஆச்சரியமானது. மக்கள் பயன்படுத்தும் உணவுகளை பரிசோதிக்கும் சுகாதார அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயுர்வேத மருத்துவர் கூறியுள்ளார்.