மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் குவிப்பு!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்கு முன்னால் ஒரு வருடத்தை கடந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்றைய தினம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அப்பகுதி மக்கள் தீர்மானித்திருந்தனர்.

எனினும் தென்பகுதியில் ஏற்பட்ட இனவாத தாக்குதலையடுத்து குறித்த போராட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

போராட்டம் நடைபெறப்போகின்றது என்ற செய்தியை அறிந்த பொலிஸார் அப்பகுதிக்கு வருகைதந்ததுடன். மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.