யாழ்ப்பாணத்தில் பணம் பறிக்கும் கும்பலை சுற்றிவளைத்து பிடித்த இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலை வேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பலை, சுற்றிவளைத்து பிடித்த இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்தப் பகுதியால் தனிமையில் செல்பவர்களிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் தமது வாகனத்திற்கு பெற்றோல் இல்லை என்று தெரிவித்து பணம் தருமாறு மிரட்டல் பாணியில் பணம் பறிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்திருக்கின்றது.

இந்தச் சம்பவம் தொடர்ந்தும் நடை பெற்று வந்த நிலையில், நாவற்குழி இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று குறித்த நபர்களை சுற்றிவளைத்திருக்கின்றனர்.

அவ்வேளை அந்தப் பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் சுற்றிவளைத்த இளைஞர்களிடம் நடந்த சம்பவம் தொடர்பில் கேட்டிருக்கின்றனர்.

பணம் பறிக்கும் நடவடிக்கை குறித்து அவர்கள் விளக்கமறித்த நிலையில், சுற்றிவளைக்கப்பட்ட நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் பலாலி வீதி உட்பட்ட பல முக்கிய வீதிகளிலும் வீதியில் செல்பவர்களிடம் பணம் பறிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.