நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட கோமகன் கட்டுநாயக்காவில் மீண்டும் கைது!!

தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன் இன்று கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது 

செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு பயணம் செய்வதற்காக வானூர்தி நிலையத்துக்குச் சென்ற போது, அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வானூர்தி நிலையப் பொலிஸார் நண்பகல் 12 மணியளவில் அவரைக் கைது செய்தனர்.பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கடந்த 2010.08.23 ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் தென்னிலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கோமகன் கடந்த 2016.02.29 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் ஆலய வழிபாட்டுக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட போது அவர் கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரைக் கைது செய்த பொலிஸார் அங்கு இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து விடுதலை செய்திருந்தனர்.இதனையடுத்து பயணத் தடை நீக்குமாறு கொழும்பு நீதிமன்றில் மூத்த சட்டத்தரணி கே.தவராசா ஊடாக கோமகன் மனுத் தாக்கல் செய்தார். விசாரணைகளை மேற்கொண்ட நீதிமன்று வெளிநாட்டுக்கான பயணத் தடையை நீக்கியிருந்தது.
இந்த நிலையில், இன்று அவர் இந்தியாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்திற்குச் சென்றார். 2.40 மணிக்கு பயணிக்கும் சிறிலங்கன் எயார்லைன் வானூர்தியில் பயணிப்பதற்கு அவர் அனுமதியைப் பெற்றிருந்தார்.இன்று மதியம் 12 மணியளவில் வானூர்தி நிலையம் சென்ற அவரை பொலிஸார் கைது செய்தனர். பயணத் தடை நீக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றினால் வழங்கப்பட்ட ஆவணங்களை அவர் காண்பித்த போதிலும் அது தொடர்பாக குடியகல்வு மற்றும் குடிவரவுத் திணைக்களத்திற்கு நீதிமன்று அறிவித்திருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்திருந்தனர்.