சமூக ஊடகங்கள் மீதான தடை இன்று நீக்கப்படும்

கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து சிறிலங்காவில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று மீண்டும் செயற்படத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூல், கீச்சகம், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை இன்று நீக்கப்படும் என்று சிறிலங்காவின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மோசமான தகவல்கள் பரப்பப்பட்டதால் தான், சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் இன்று அந்த தடை நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.