இந்திய தூதருடனான சந்திப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கூட்டமைப்பின் தவிசாளர்

இந்திய தூதருடனான சந்திப்பிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை தவிசாளர் ஒருவர் கூட்ட மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இந்திய தூதர் கோபால் பாக்ளேக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இளம் தலைவர்கள் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. சந்திப்பில் இளம் தலைவர்கள் என குறிப்பிட்டு அழைத்து செல்லப்பட்டவர்கள் சுமந்திரன் அணியினரே.

யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் அணியாக இயங்கி வரும் தவிசாளர்களான கரவெட்டி, மானிப்பாய், வலிவடக்கு, சாவகச்சேரி, தவிசாளர்கள் அழைக்கப்பட்டனர். அத்துடன், சிறிதரனின் அணியை சேர்ந்த பளை, கரைச்சி தவிசாளர்களும் அழைக்கப்பட்டனர்.

சுமந்திரன் அணியில் இணைந்து செயற்பட்டு வருவதாலும், தமது தரப்பினரை மட்டும் அழைப்பதால் சர்ச்சை வருமென்பதாலும் கரைச்சி, பளை தவிசாளர்கள் அழைக்கப்பட்டனர், இது தவிர, வேறு தவிசாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை.

இளம் தலைவர்கள் என சுமந்திரனின் வலதும், இடதும் கைகளான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், ச.சுகிர்தன் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

அவர்களுடன், பா.கஜதீபனும் அழைக்கப்பட்டார். சயந்தன், சுகிர்தனை மட்டும் அழைப்பதால் சர்ச்சையாகிவிடும் என்பதால் தவிர்க்க முடியாமல் கஜதீபன் அழைக்கப்பட்டார்.

இளம் தலைவர்கள் கூட்டத்தில், சுமந்திரன் அணியிலுள்ள பல இளம் தலைவர்களையும் விட இளம் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள செயற்திறனுள்ள தவிசாளருமான தி.நிரோஷூம் இன்றைய சந்திப்பிற்கு சென்றார்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தவிசாளர் நிரோஷூம் அழைத்து செல்லப்பட்டார். சந்திப்பு மண்டபத்தில் அவர் உட்கார்ந்த பின்னர், அவரது பெயர் சந்திப்பில் இடம்பெறுபவர்கள் என கூட்டமைப்பு தரப்பினால் வழங்கப்பட்ட பெயரில் உள்ளடக்கப்படவில்லையென கூறி, மண்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சந்திப்பில் கலந்து கொள்பவர்களின் பெயர் விபரம் எம்.ஏ.சுமந்திரனினாலேயே வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது அணியினரையே சந்திப்பிற்கு அழைத்துள்ளதாக கூட்டமைப்பிற்குள் சர்ச்சை எற்பட்டுள்ளது.