பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றும் பள்ளிவாசல் மீது தாக்குதல்

இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் நேற்று ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் மாத்திரமே இடம்பெற்றதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

“நேற்றுக்காலை ஒரே ஒரு வன்முறைச் சம்பவம் மாத்திரம் இடம்பெற்றுள்ளது. உந்துருளிகளில் வந்த சிலர், பள்ளிவாசல் மீது கற்களை வீசினர். காவல்துறையினர் அங்கு சென்றதும், அவர்கள் ஒரு உந்துருளியையும் கைவிட்டு தப்பியோடி விட்டனர்.

உந்துருளியின் உரிமையாளரை அடையாளம் கண்டு, இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கரந்தெனியவையும், ஒருவர், மீரிகமவையும் சேர்ந்தவர்கள். கொழும்பிலுள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.

கண்டியில் 3000 காவல்துறையினரும், 750 சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கண்டியில் வன்முறைகளில் ஈடுபட்டதாக, இதுவரை 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வன்முறைகளினால், 7 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் வாணிப நிலையங்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பான 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பல்லேகமவில் 16 சம்பவங்கள் குறித்தும், தெல்தெனியவில் 18 சம்பவங்கள் குறித்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

வன்முறைகளில் 2 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். மேலும், பூஜாபிட்டியவில் குண்டு ஒன்றைக் கொண்டு சென்ற ஒருவர் அது வெடித்து மரணமாகியுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.