யாழில் கோவிட் தொற்று அபாயத்தால் தற்காலிகமாக மூடப்படும் இராமநாதன் கல்லூரி

யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி நாளை திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதானர்மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபர், ஆசிரியர் ஆகியோர் இன்று கோவிட் வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டதையடுத்து சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பத்திலேயே மீளத்திறக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை,யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும், முல்லைத்தீவில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பனவற்றில் இன்று 668 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போதே வடக்கில் 15 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 12 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென்பதும் குறிப்பிடத்தக்கது.