கொழும்பு மாநகர சபையினை பின்பற்றியே, யாழ்ப்பாண மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். சீருடை வழங்கிய விடயத்தில் வேறு எந்த உள்நோக்கமோ அல்லது திட்டமோ தங்களுக்கு இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாண நகரத்தை தூய்மையாகவும், அழகாகவும் பேணுவதற்காக, மாநாகர சபையினால் ஐவர் கொண்ட காவல்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை என்பன தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினரிடம் யாழ்ப்பாண காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.