ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் அழியுமா? அதிர வைக்கும் பல உண்மைகள்

சாதாரண சளி தொந்தரவு போன்றவைக்கு ஆவி பிடிப்பது பலனளிக்குமே தவிர, கோவிட் போன்ற ஒரு கொடிய தொற்று நோயை இது குணப்படுத்தாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களை வாட்டி வதைக்கும், கொரோனா வைரஸ் தற்போது வரை மக்களை படாதபாடு படுத்திவருவதுடன், இரண்டாம் அலை சுனாமி போன்று படையெடுத்து வருகின்றது.

இந்நிலையில் ஆவிபிடித்தால் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்ற தகவல் வெகுநாட்களுக்கு முன்பே கூறப்பட்டுவரும் நிலையில், இது உண்மையா என்பது தற்போது தெரியவந்துள்ளது.

நீராவி உள்ளிழுத்தல் (ஆவி பிடித்தல்) எதற்காக? மூக்கடைப்பு, குளிர் அல்லது சைனஸ், நீர் கோர்ப்பதால் தலை பாரமாக இருப்பது போன்ற நேரத்தில் ஆவி பிடிப்பது என்பது நாசி பாதைகளை தணிக்க மற்றும் திறக்கவும் மற்றும் சில நோய்த்தொற்று அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறவும் பரவலாக வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சூடு நீரில் போர்வை அல்லது துணியை போர்த்தி கொண்டு ஆவி பிடிப்பது புத்துணர்வை அளிக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், வியர்வையில் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், சருமம் பொலிவுறும் என்று இயற்கை மருத்துவம் கூறுகிறது.

கோவிட் -19 தொற்றுடன் போரிட ஆவி பிடிப்பது உதவுமா?: கொரோனா வைரஸை அழிக்க அல்லது தடுக்க நீராவியை உள்ளிழுக்கும் சிகிச்சையை உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) பரிந்துரைக்கவில்லை என்பதை தற்போது வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது இங்கே அவசியமாகிறது.

சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய CDC பிரதிநிதி, நீராவி உள்ளிழுக்கும் நடைமுறை ஆபத்தானது என்றும், இது கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்பதற்கான எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர்களின் கருத்துகள்: சில நிபுணர்கள் ஆவி பிடிப்பது பற்றி கூறுகையில், நுரையீரல் மிகவும் மென்மையானது. நீராவி மிகவும் வெப்பமானது. இரண்டும் ஒன்று சேர்வது சரியானது இல்லை. அதிக வெப்பமான நீராவி நுரையீரல் செல்களில் தீக்காயக் காயத்தை கூட ஏற்படுத்தலாம்.

கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றால் பிரச்னை இல்லை. ஒரு வேளை கொரோனா வைரஸ் தொற்று உடலில் இருந்து, ஆவி பிடிப்பதால் நுரையீரல் செல்கள் சேதமடைந்தால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு மிக அதிகம் என எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க நுரையீரல் கழகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆல்பர்ட் ரிஸோ கூறுகையில், நீராவி உள்ளிழுக்கும் முறைகள் சுவாச அறிகுறிகளை போக்க உதவும் என்றாலும் அவை வைரஸை கொல்லாது என்றார்.

ஸ்பானிஷ் குழந்தை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், “நீராவி உள்ளிழுக்கும் சிகிச்சை” தீக்காயத்தை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது தெளிவாகிறது என குறிப்பிட்டுள்ளது.

வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் வில்லியம் ஷாஃப்னரின் அறிக்கை படி, சூடான ஈரப்பதம் வைரஸை அழிக்காது. எனவே கொரோனவை கொல்ல சூடான நீராவி உள்ளிழுக்கும் முறையை பயன்படுத்துவதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து சாதாரண சளி தொந்தரவு போன்றவைக்கு ஆவி பிடிப்பது பலனளிக்குமே தவிர, கோவிட் போன்ற ஒரு கொடிய தொற்று நோயை இது குணப்படுத்தாது என்பதே.

கொரோனா தொற்றை எதிர்த்து போரிட சமூக விலகல், மாஸ்க், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் தடுப்பு மருந்து ஆகியவை மட்டுமே உதவும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.