கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்: வெளியான பரபரப்பு தகவல்

கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் தொடர்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த கொலை சம்பவத்திற்கு தனிப்பட்ட முரண்பாடுகளே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

இன்று காலை (17) கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகை ஒன்றுக்குள் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதை அயலவர்கள் அவனித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த சடலத்தில் முகத்தின் மீது கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை சம்பவ இடத்திற்கு இன்று மதியம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வந்துள்ளனர்.

பின்னர் அவர்களின் முன்னிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

மேலும் சடலமாக மீட்கபட்ட 27 வயதான குடும்பஸ்தர் குடும்பத்தகராறு காரணமாக குடும்பத்தில் இருந்து நீண்ட காலமாக பிரிந்து வாழ்வதாகவும் அவரது மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.