ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பில்! திக்குமுக்காடும் மின்சார சபை – இருளில் மூழ்குமா இலங்கை?

இலங்கை மின்சார சபையில் இன்று மாலை 5மணி வரைக்குமே டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு, இருப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

முழு நாடும் நாளைய தினம் இருளில் மூழ்கும் என்று மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

நாளைய தினத்திற்கான மின்சார உற்பத்திக்காக 2000 மெற்றின்தொன் டீசல் மற்றும் உலை எண்ணெய் என்பன தேவைப்படுகிறது.

ஏற்கனவே நாம் இந்த விடயங்களை கூறியபோது, அமைச்சர் கம்மன்பில, அதனை நிராகரித்து வந்தார். எனினும் தற்போது அவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என்றும் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையிலும், ஏற்பட்டிருக்கும் நிலைமையை சமாளித்து இன்று மாலையில் மின்சாரம் தடைப்படாமல் விநியோகிக்கப்படும் என்று மின்சாரசபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்றூ நவமணி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், 22 சதவீத மின்சாரம் நீர் மின் உற்பத்தி ஊடாக விநியோகிக்கப்படுகின்றது. சகல மின் உற்பத்தி நிலையங்களும் டீசல் மூலமே இயங்குகின்றன. களனிதிஸ்ஸயில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் டீசலுக்கு மேலதிகமாக, நெப்டாவை பயன்படுத்தி இயக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் நெப்டா தற்போது முழுமையாக தீர்ந்துள்ளதனால் இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது.

அதன்பின்னர், 3,000 மெகாவோட் மின்சாரத்தை, வழங்க முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்த அவர், இதுவொரு பாரிய பிரச்சினையாகும். அதேநேரம், சப்புகஸ்கந்தை, நிலையத்திற்கான எரிபொருள் இன்று நண்பகலுடன் தீர்ந்துவிடும் என்றும் கூறினார்.

இதனால் மேலும் 168 மெகாவோட் மின்சாரத்தை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும், இதன் காரணமாக பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை, ஏற்படுத்த நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின்சார பொறியியலாளர்கள் சங்கம் இன்று காலை முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.