இலங்கை டீசல் பற்றாக்குறை: போக்குவரத்து சேவை முற்றாக முடங்கும் அபாயம்

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வது நெருக்கடியாக மாறியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இலங்கை முழுவதும் 25 முதல் 35 வீதமான தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் தீர்ந்து வருவதாகவும், நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

ஓரிரு நாட்களில் நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பேருந்து சேவை முற்றாகத் தடைப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.