கிணற்றிலிருந்து காயங்களுடன் பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்பு

ஹட்டன் – பொகவந்தலாவ, செவ்வகத்தை பகுதியில் தோட்ட கிணறு ஒன்றிலிருந்து உயர்தர பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில், பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பாரதிதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியினை பார்த்து விட்டு வீடு திரும்பிய நிலையில் நீண்ட நேரமாகியும் காணவில்லை என உறவினர்கள தேடிய போது மரக்கறி தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது மாணவன் மீட்கப்பட்டு பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் உதட்டுபகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.