காதுக்குள் நுழைந்த பூச்சியை எடுப்பது எப்படி? இந்த தவறை செய்திடாதீங்க

நமது காதுக்குள் எதாவது ஒரு பிரச்சினை என்றால் அதனால் ஏற்படும் வலியினை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. சில தருணங்களில் பூச்சி, எறும்பு காதுக்குள் சென்று குடைச்சல் கொடுக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பூச்சியை எடுக்க என்ன செய்யலாம்?
காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

உடனடியாக காதினுள் எண்ணையையோ, உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும் அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.

தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.

இந்த தவறை செய்யாதீர்கள்

பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது.

இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும் அல்லது பூச்சி கடித்திருக்கும்செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.

ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட்டு பின்பு தான் அப்புறப்படுத்த வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. மிகவும் கவனமாகக் கையாளாவிட்டால் அறுவைச்சிகிச்சை வரை போய் முடியும்.